Home Archive by category

விஜய் அரசியலுக்கு வர வேண்டும்..! - அவர் தான் என்னை ஆதரிக்க வேண்டும்! சீமான்

தினத்தந்தி அதிபர் டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் மரியாதை செலுத்தினர். நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது, 

பத்திரிக்கை துறை மட்டும் இல்லாமல் விளையாட்டுத் துறையிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமை அவரை சாரும், அனைவரையும் நேசித்த பெருமகன். அவருடைய நினைவை போற்றுவதில் பெருமை அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அம்பேத்கர் பிறந்தநாளுக்கு நடிகர் விஜய்யின் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது அரசியல் நகர்வாக இருக்குமோ? என்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த சீமான், அதற்கான முயற்சியை தான் தம்பி செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன். மாற்று என்பதில் இந்த கட்சியை விட்டால் அந்த கட்சி என்று அரை நூற்றாண்டுகளை இந்த நிலம் கடந்து விட்டது. 

தம்பியெல்லாம் வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்து தான் இதையெல்லாம் செய்கிறார் என்றார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வந்தால் சீமானின் ஆதரவு இருக்குமா? என்று கேட்டதற்கு, நான் யாரையும் ஆதரிக்க வேண்டியதில்லை. தம்பிதான் என்னை ஆதரிக்க வேண்டும் என்றார். எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம் என்றும் சீமான் தெரிவித்தார்.

Related Posts