7 இலங்கை தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை
தமிழகம் - திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமில் இருந்து புதன்கிழமை 7 இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து போலி கடவுச்சீட்டு மற்றும் விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு சிறப்பு முகாம்களில் வைத்து பராமரித்து வருகிறது.
இதன்படி, இலங்கை, கம்போடியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 117 பேர் திருச்சி சிறப்பு முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் தங்களுடைய தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவில்லை.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிறப்பு முகாமில் தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஏழு பேருக்கு விடுதலைக்கான உத்தரவு ஆவணங்கள் கிடைத்ததை அடுத்து அவர்கள் நேற்று (5) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேலும் பலர் இந்த முகாமில் விடுதலை வேண்டி கோரிக்கைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.