கச்சதீவில் சீனர்களை முகாமிடச் செய்து தென்னிந்தியாவை உளவு பார்க்க திட்டம்; தமிழக குரல்
இலங்கையின் கச்சதீவு பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விடயத்தில் இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சதீவில் சிங்களக் கடற்படை புத்தர் சிலையை அமைத்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுமாறும் இந்திய அரசாங்கம் ஆணையிட வேண்டும் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், சிங்கள அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் மட்டுமே உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தவர்களும் பங்கேற்கின்றனர்.
குறித்த திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கின்ற நிலையில், அங்கு புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சதீவை சிங்களமயமாக்கும் செயலாகும் எனவும் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புத்தர் சிலை வழிபாடு என்ற பெயரில் சிங்களர்களையும், சீனர்களையும் கச்சதீவில் முகாமிடச் செய்து, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவை உளவு பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் அந்தோனியார் ஆலயத் திருவிழா மற்றும் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றுக்கு இந்தியா தான் உதவி வருகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு கச்சதீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் வலியுறுத்தியுள்ளார்.