Home Archive by category

'திமுக ஆட்சியை அகற்ற சதி': தமிழக முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தி.மு.க ஆட்சியை அகற்றுவதற்கு பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டிக் கொண்டுள்ளார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, "அண்ணா மற்றும் கருணாநிதியின் லட்சியங்களை நிறைவேற்றப் பாடுபட வேண்டும். ஆட்சியிலிருந்தாலும், இல்லா விட்டாலும் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்குப் பாடுபட வேண்டும். நம்மைப் பாராட்டக் கூடியவர்கள், வாழ்த்தக் கூடியவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலத்தவர்கள், அந்த மாநிலங்களின் தலைவர்கள் நம்மை வாழ்த்திக் கொண்டுள்ளனர். கடல் கடந்து வாழ்பவர்களும் ஆட்சியின் சாதனைகளைப் பார்த்துப் பாராட்டிக் கொண்டுள்ளனர்.

ஆனால், நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்று உலவிக் கொண்டு இருக்கும் சிலர், இந்த ஆட்சி திராவிட மொடல் என்று கூறி தமிழக மக்களைக் கவரக் கூடிய வகையில் ஆட்சி செய்து கொண்டு உள்ளதால், தொடர்ந்து ஆட்சியை விட்டால், நம்முடைய பிழைப்பு என்ன ஆவது என்று நினைத்து புழுதி வாரித் தூற்றிக் கொண்டுள்ளார்கள்.

இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டிக் கொண்டுள்ளார்கள். கலவரத்தை ஏற்படுத்தலாமா, ஜாதிக் கலவரத்தைத் தூண்டலாமா, மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா, மக்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தலாமா என்று திட்டமிட்டு அந்த காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேவையற்ற விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வது இல்லை. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளது. சிறப்பான கூட்டணி அமைத்து, அனைத்து தேர்தல்களிலும் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டு வருகிறோம். இதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நாட்டைக் காப்பற்ற வேண்டுமென்றால், மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று கூறி வருகிறேன். அதை நீங்கள் செய்தால், தமிழக மக்களை மட்டுமல்லாமல், இந்தியாவையும் காப்பாற்ற முடியும். உங்களின் ஒத்துழைப்புடன் பணியைத் தொடரப் போகிறேன். நீங்கள் உங்களின் கடமையை ஆற்றுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts