குரங்கம்மை நோய் சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு
சுகாதார நெருக்கடியாக குரங்கம்மை அறிவிப்புகொரோனா தொற்றுக்கு இடையில் புதிதாக பரவி வரும் குரங்கம்மை நோய் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதால், அதனை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்க பகுதிகளில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கம்மை நோய், தற்போது உலகில் 70-க்கும மேற்பட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. குரங்கம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருவதால், உலக நாடுகள் அதனை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஏற்கனவே, கொரோனா அலை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது, குரங்கம்மை நோயும் அதிவேகமாக பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரங்கம்மை நோயின் தாக்கத்தை பொருட்டு அதனை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், குரங்கம்மை நோய் பாதித்து உயிரிழப்பும் உயர்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன் இல்லாத அளவு பல்வேறு நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதாகவும், ஐரோப்பாவுக்கு குரங்கம்மையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் எச்சரித்தார். இதனால் ஆய்வாளர்களின் கருத்துகளின்படி குரங்கம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக அறிவிக்கிறோம் எனத் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்தியாவில், டெல்லியில் குரங்கம்மை நோய் பதிவாகியுள்ளதால், மத்திய அரசு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.