இரண்டாவது முறையாக திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலர் பதவி வழங்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்சியில் கோரிக்கை எழுந்தது. இதையொட்டி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்களில் மக்களைக் கவரும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.
இந்த நிலையில், திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்," திமுக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ்.ஜோயல், ந.ரகுபதி, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, சி. ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல திமுக மகளிரணி தலைவராக விஜயா தாயன்பன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மகளிரணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.