ஹோட்டல் அறையில் குடும்ப உறுப்பினர்கள் சடலமாக மீட்பு -தெலுங்கானாவில் பரபரப்பு
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் நிசாமாபாத்தில் உள்ள ஹோட்டலுக்கு சில தினங்களுக்கு முன்னர் சூர்யபிரகாஷ் (37), அவர் மனைவி அக்ஷயா (35) மற்றும் தம்பதியின் பிள்ளைகளான பிரத்யுஷா (13), ஆத்வித் (7) வந்து தங்கினார்கள்.
அறையில் இருந்து அவர்கள் இரண்டு நாட்களாக வெளியே வராமல் இருந்த நிலையில் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறையின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது சூர்யபிரகாஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்றய மூவரும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர்.
அங்கிருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். என்னுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபட்ட கிரண் குமார், வெங்கட், கனயம் சக்கரவர்த்தி, ஜனம் ஆகிய நால்வரும் இலாபம் பிரிப்பதில் என்னுடன் சண்டை போட்டனர். என் வீட்டிற்கு வந்து எங்களை துன்புறுத்தி மோசமாக நடந்து கொண்டனர்.அவர்கள் தான் எங்கள் மரணத்திற்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கேக்கில் குடும்பத்தாருக்கு விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு, சூர்யபிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.