ஆளுநர் பாராட்டிவிட்டார் என்பதற்காக கொள்கையை விட்டு தர மாட்டேன் - முதல்வர் உறுதி
ஆளுநர் பாராட்டிவிட்டார் என்பதற்காக கொள்கைகளை விட்டு தர மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், "முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் த.மோ.அன்பரசன் செங்கோல் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் எனக்கூறி உரையைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுக எதிர்கட்சிகள் பேசுவதைப் பற்றி எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. அவர்கள் அப்படிதான் பேசுவார்கள். அப்படித்தான் பேச வேண்டும். ஆனால் அரசின் ஒரு அங்கமாக இருக்க வேண்டிய ஆளுநர் ஏன் எதிரிக்கட்சி போல் செயல்படவேண்டும் என கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் எந்த நோக்கத்திற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டார். மாநில அமைதியை குலைக்க வந்துள்ளாரா? தமிழ்நாட்டின் அமைதியான சூழலை சீர்குலைக்கத்தான் அவரை அனுப்பியுள்ளார்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது என முதல்வர் பேசினார். சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் முதலமைச்சர் என்னிடம் அன்பாக உள்ளார். நானும் அன்பாகத்தான் உள்ளேன் என கூறியுள்ளார். அவர் இப்படி என்னை பாராட்டி விட்டார் என்பதற்காக கொள்கைகளை விட்டுத்தர மாட்டேன். சட்டமன்றத்தில் அவை மரபை மீறிய ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றினோம் என பேசினார்.