Home Archive by category

நெடுந்தீவில் நால்வர் கொண்ட கும்பல் கொடூர கொலை - ஆரம்ப விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள்

நெடுந்தீவில்  நான்கு பேர் கொண்ட கும்பல் சென்றே 3 பெண்கள் உள்பட ஐவரை கூரிய ஆயுதங்களினால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள கனகர் பூரணம் (வயது 100) என்பவர் தனது நான்கு விரல்களை காண்பித்து கூறியதை வைத்த இந்த தகவல் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் நேற்று இரவு 10 மணியளவிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென நிபுணத்துவ விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் வயோதிபர்கள் என்பதனால் காது கேட்கும் திறன் குறைவு எனவும் அதனால் அவர்கள் அபாயக்குரல் எழுப்பியிருக்கமாட்டார்கள் என்றும் நிபுணத்துவ விசாரணைகளில் கூறப்பட்டது.

கடற்படையினரின் பதிவுகள் மற்றும் பிரதேசத்தில் இடம்பெற்ற விசாரணைகளில் உள்ளூரில் உள்ளவர்களே இந்த கொலையை செய்துள்ளனர் என்றும் அறிய வந்துள்ளது.

சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன், விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலங்களை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Related Posts