சைவர்களை மதம் மாற்றுகின்றவர் பண்ணை அம்மனுக்கு ஆதரவா?..! அடித்து விரட்டுங்கள்- மறவன்புலவு சச்சிதானந்தன்
பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலை தொடர்பான வழக்கை நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, சைவ சமயத்திற்கு எதிரான சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்ததாக சிவசேனை தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
சைவ மக்களை மதம் மாற்றுவர்கள் சைவர் சார்பில் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவ சேனைத் தொண்டர்கள், கருப்புக் கொடி காட்டி விரட்டுமாறும் குரல் எழுப்பி அகற்றுமாறும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
வழக்கு கடந்த வாரம் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது, நல்லை ஆதீனம், இந்து மகாசபை ஆகியவற்றின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
இதேவேளை ஆறு.திருமுகன்கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் முன்னிலையாகியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாயைக் கருப்புக் கொடி காட்டி விரட்டுமாறு மறவன்புலவு க.சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த சட்டத்தரணி, சைவக் கோயில்களைச் சாத்தான் கோயில்கள் என நாள்தோறும் பரப்புகின்றவர் என்றும் சைவ சமயத்தை விட்டு வெளியேறி மதம் மாறுங்கள் என நாள்தோறும் பரப்புரை செய்பவர் என்றும் சிலுவைக்கு வாக்களியுங்கள் எனத் தேர்தல் காலத்தில் கூறியவர் என்றும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
பண்ணை அம்மன் சிலை வழக்கில், ஆரம்பத்திலிருந்து இந்து அமைப்புக்கள் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தாவிடம் ஆலோசனை பெற்று, அவரை முன்னிலையாக கேட்டிருந்தனர்.
வழக்கில் அன்று, நீதிமன்றம் வந்த எம்.ஏ.சுமந்திரன், அம்மன் சிலை வழக்கில் நல்லை ஆதினம், இந்து மகாசபை ஆகியன சார்பில் முன்னிலையாகுவதாக குறிப்பிட்டிருந்தார்.