Home Archive by category

நேட்டோவில் இணைந்த பின்லாந்து; கடும் கோபத்தில் புடின்

நேட்டோ அமைப்பின் 31 ஆவது உறுப்பு நாடாக பின்லாந்து இன்று இணைந்து கொண்டுள்ளது.

பின்லாந்தை உறுப்பினராக அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரிடம் பின்லாந்து வெளியுறவு அமைச்சர் இணைவு ஆவணத்தை கையளித்துள்ளார்.

பின்லாந்தின் இணைவு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான தனது முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பு நேட்டோவின் விரிவாக்கம் குறித்து அவர் பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவுடன் எல்லையை பகிரும் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதால் அந்த நாட்டிற்குள் நேட்டோ படைத்தளம், படைகள் குவிக்கப்படலாம்.

இது ரஷ்யாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த வழிவகுக்கும்.

அதேவேளை பின்லாந்தை போன்று ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பித்துள்ளது. ஸ்வீடன் மீதான விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் உள்ள நிலையில் பின்லாந்து இன்று நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளது.
மூன்றாம் உலகப்போர்

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போருக்கு மத்தியில், பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள சம்பவம் உலக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய இராணுவ கூட்டமைப்பு நேட்டோ. நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய இராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது.

இந்த இராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி உட்பட 30 நாடுகள் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து ஐரோப்பிய நாடுகள் இடையே போர் அச்சம் ஏற்பட்டது.

ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அது 3ஆம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் நிலவி வருகிறது. 

Related Posts