75இல் சிறிமாவிற்கு நடந்தது 2025 இல் ரணிலுக்கு ஏற்படும்
கடந்த காலத்தில் தேர்தல்களை ஒத்திவைத்த அனைத்து அரசாங்கங்களும் படுதோல்வியையே சந்தித்திருந்த வரலாறே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சர்வஜன வாக்குரிமை தொடர்பான பிரேரணை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.
1975ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க நாடாளுமன்ற தேர்தலை 2 வருடங்கள் ஒத்தி வைத்திருந்தாகவும் ஆனால் அதன் பெறுபேறு என்ன என்றும் 1977ஆம் ஆண்டு பாரிய படுதோல்வியாக அது அமைந்திருந்தாக உதய கம்மன்பில நினைவு படுத்தியிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மாகாணசபை தேர்தலை ஒத்திவைத்ததன் காரணமாகவே ஜக்கிய தேசிய கட்சியின் ஒரு வேட்பாளர்கள் கூட வெற்றியடையவில்லை என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
எனவே தேர்தலை ஒத்திவைத்தால் அது அரசாங்கத்திற்கு லாபம் என நினைப்பது ஒரு மூடநம்பிக்கை என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளதாகவும் அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லை என்றும் தனியார் வைத்தியசாலைகளின் விலைகளை தாங்கிகொள்ள முடியாத நிலையில் உள்ளதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்திருந்தார்.
வரி சுமையினை தாங்கி கொள்ள முடியாத நடுத்தர வர்க்கத்தினர் இன்று செய்வதறியாது நிர்கதியாகியுள்ளதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.