Home Archive by category

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவு - தமிழரசுக் கட்சி வேட்பாளராக சொலமன் சிறில் நியமனம்

யாழ். மாநகர சபையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறில் அவர்களை நியமிக்க திட்டமிட்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் தமிழ் அரசு கட்சியின் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில், பெரும்பாலானோர் சொலமன் சிறில் அவர்களது பெயரை முன்மொழிந்தனர். 

அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.

யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் சொலமன் சிறில் அவர்களுக்கான ஆதரவை திரட்டிய பின்னர் அவரை முதல்வர் வேட்பாளராக களமிறக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 19 ஆம் திகதி உள்ளூராட்சிசபைகள் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலத்தில் முதல்வராக தெரிவு செய்யப்படும் சிறிலுக்கு மாநகர சபை இயங்கும் காலப்பகுதி வரை மாநகரசபை உறுப்பினர்கள் சிறில் அவர்களுக்குப் பூரண ஆதரவைத் தொடர்ந்தும் வழங்குவார்கள். அதேவேளை மாநகர சபை பாதீடானது மக்களுக்கானதே அது தொடர்பில் அனைவரும் சாதகமான தீர்மானங்களை மேற்கொள்வர்.

இதை விட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்காக ஏற்கனவே வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கவேண்டு் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

எதிர்வரும் தினங்களில் அனைத்து கட்சிகளும் சபாநாயகர் தலைமையில் ஒன்றுகூடி கலந்துரையாடவுள்ளனர்.

கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான பிரதேசசபை வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இப் பிரதேசசபை முக்கியமாக காணப்படுவதால் சுயேட்சைக் குழுக்களூடாகவோ ஏனைய முறைகளிலோ வேட்பாளர்களைக் களமிறக்க ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. 

அந்த வகையில் முஸ்லிம் வட்டாரத்தை சேர்ந்த ஒரு வேட்பாளரைத் தவிர ஏனைய அனைவரும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.  அனைவரும் குறித்த வட்டாரங்களில் வெற்றிபெறக்கூடிய சாத்தியங்களே அதிகமாகக் காணப்படுகின்றது.

கரைத்துறைப்பற்று பிரதேச சபை விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்னிச்சையாக செயற்பட்டாரா என ஊடகவியளாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில், இது தொடர்பாக எதிர்வரும் காலங்களில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.- என்றார்.

Related Posts