தேர்தலுக்கான நிதி தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் நிறுத்தி வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில், நிதி அமைச்சின் செயலாளருக்கும், நிதி அமைச்சர் சார்பில் சட்டமா அதிபருக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தலுக்கான அச்சப் பணிகளுக்கு தேவையான நிதியை வழங்காதிருக்கும் நிதி அமைச்சின் செயற்பாட்டிற்கும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணைகளை மே மாதம் 26ம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.