கிறீஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு
கிறீஸில் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதென அந்நாட்டின் தீயணைப்புத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
ஏதென்ஸ் நகரிலிருந்து தெசலோனிகி நகருக்கு நேற்று அதிகாலை 350 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயில், லரிசா நகரின் தெம்பி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது.
இதனால், பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தன.
இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 42 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
இச் சம்பவத்தில் உயிர் தப்பியவர்களை தேடி இரவு முழுவதும் தேடுதல் நடத்தப்பட்டதாகவும், ஆனால், உயிர்தப்பியவர்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு அருகியுள்ளதாகவும் தீணைப்புத் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தளவு பாரிய அனர்த்தத்தை இதற்கு முன் தாம் எதிர்கொண்டதில்லை என மீட்புக்குழு உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் லரிசா நகர ரயில் நிலைய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.