Home Archive by category

இலங்கையில் மீண்டும் தாக்குதல்கள் - பிரித்தானியா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை போன்ற தாக்குதல்கள் மீண்டும் மேற்கொள்ளப்படலாம் என பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வரும் பின்னணயில் தமது நாட்டு மக்களுக்கான பயண ஆலோசனை அறிவுறுத்தலில், பிரித்தானிய அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், நாளாந்தம் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதனை கலைப்பதற்கு கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை சர்வதேச அளவில் பேசு பொருளாகியுள்ளது.

அந்த வகையில், இன்றைய தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வீதிகள் தடைப்படலாம் என்பதுடன் அத்தியாவசிய சேவைகளின் விநியோகத்திலும் இடையூறுகள் ஏற்படலாம் என பிரித்தானிய அரசாங்கம் தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், ஊரடங்கு சட்டம் மற்றும் அவசரகால சட்டம் என்பன எந்த வேளையிலும் நடைமுறைப்படுத்தப்படலாம் என பிரித்தானிய அரசாங்கம் தனது பிரஜைகளை எச்சரித்துள்ளதுடன் இலங்கையின் நிலை குறித்து உள்ளூர் ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 250 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீண்டும் அவ்வாறான தாக்குதல்கள்மேற்கொள்ளப்படும் சாத்தியங்கள் குறித்து பிரித்தானிய பிரஜைகள் அவதானமாக இருக்க வேண்டுமென அந்த நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

ஆகவே, பிரித்தானிய பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது பயணக் காப்பீட்டை பெறுவதும், அது தொடர்பில் ஆராய்வதும் முன்னெப்போதையும் விட முக்கியமானது எனவும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன் நுழைவு கட்டுப்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய வேண்டும் என்பதோடு விஜயத்தின் பின்னரும் பயண சேவை வழங்குநர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, பிரித்தானியா அரசாங்கத்தின் உதவி தேவைப்படுமாயின் அருகிலுள்ள தூதரகத்தை நாடுமாறு மேலும் வலியுறுத்தியுள்ளது.

Related Posts