கோட்டா நாடு திரும்புகிறார்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என தமக்கு அறிவிக்கப்பட்டதாக என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு மற்றும் ஆகஸ்ட் மாதம் அவர் இலங்கை திரும்பியதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தலைமறைவாக இருக்கவில்லை. முன்னாள் அதிபர் உத்தியோகபூர்வ வீசா பெற்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என எனக்கு அறிவிக்கப்பட்டது அதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உரிய அதிகாரிகளினால் முன்னாள் அதிபருக்கு அறிவிக்கப்படும்.
இருப்பினும், முன்னாள் அதிபர் தொடர்பான பயணத் திட்டங்கள் அல்லது அவர் நாடு திரும்புவதற்கான குறிப்பிட்ட திகதிகள் குறித்து அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டார்.