கோட்டாகோகம கூடாரங்கள் முழுமையாக அகற்றப்பட்டன
கொழும்பு - காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்திலிருந்து எஞ்சியிருந்த தற்காலிக கூடாரங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டுள்ளன.
காலிமுகத்திடலில் உள்ள கோட்டாகோகம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை அதாவது இன்றைய தினம் வரை அகற்றப்பட மாட்டாது என சட்டமா அதிபர் அண்மையில் நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
அத்துடன் முறையான சட்டநடைமுறைகளைப் பின்பற்றாமல் குறித்த கூடாரங்கள் அகற்றப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
என்ற போதும் ஏற்கனவே கோட்டை பொலிஸாரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கைக்கு அமைவாக காலிமுகத்திடல் பகுதியில் இருந்த தற்காலிக கூடாரங்கள் சில அகற்றப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே ஏனைய தற்காலிக கொட்டகைகளும் அப்பகுதியிலிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.