தனித்து தீர்மானம் எடுக்கும் விக்னேஸ்வரன்: மக்கள் மத்தியிலும் அதிருப்தி - அனந்தி சசிதரன் ஆதங்கம்
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்றைய தினம் தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரனிடம் ஊடகவியலாளர்கள் "எதிர் காலத்தில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட நிலையில் நீங்களும் விக்னேஸ்வரன் கட்சி சார்பில் போட்டியிட்டீர்கள் இது தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? என எழுப்பிய கேள்விக்கு,
அனந்தி சசிதரன் பதிலளிக்கையில்,
அவருடன் தேர்தல் கூட்டாக இருந்ததே தவிர கொள்கை கூட்டாக இருக்கவில்லை. ஏன் எனில் அவர் உறுதிப்படுத்தப்பட்ட கொள்கைகளை கொண்டிருக்கவில்லை.
திடீர் முடிவுகளை கொண்டிருந்தார். தாம் முடிவுகளை எடுத்து விட்டு அறிவிப்பதும் 13வது திருத்த சட்டத்தை பயன்படுத்தி தேர்தலின் போது பொதுவாக்கெடுப்பை கையாண்ட அவர் தேர்தல் முடிந்த பின் 13ஆம் திருத்த சட்டத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்ற வகையில் இந்திய பிரதமருக்கு ஏழுதிய கடிதத்திலிருந்து, எனக்கும் அவருக்குமான முரண்பாடு பல முறை ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பது தொடர்பிலும் கூறிய கருத்து, ஜனாதிபதி அதிகாரத்தை நீக்குவது தொடர்பிலும் தனித்தே தீர்மானம் எடுத்தார். அதேவேளை அவர் எந்த விதமான வேலை திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை இதனால் மக்கள் மத்தியில் செல்வாக்கு அற்று விட்டது எனவும் மேலும் தெரிவித்தார்.