பிரதமருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதனால் போராட்டத்தின் களமாகியுள்ள நாட்டின் தலைநகரம் தாகாவில் நெருக்கடி சூழ்ந்துள்ளது.
வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் ஆட்சிக்காலம் 2024 வரை உள்ளபோதும் புதிய தேர்தலை அறிவிக்குமாறு, எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பிரதமர் ஷேக் ஹசினா உடனடியாக பதவி விலகவும், இடைக்கால பிரதமரை நியமித்து முன்கூட்டியே தேர்தலை நடத்தவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பிரதமர் ராஜினாமாவை கோரி வங்கதேச தேசிய கட்சியின் எம்பிக்கள் 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை அடக்க முற்பட்டதில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். கூடுதல் பாதுகாப்பு பணிகளுக்காக பல்லாயிரம் போலீஸார் தலைநகரில் குவிக்கப்பட்டு வருகின்றனர். போராட்டத்தை வலுவிலக்கச் செய்வதற்காக எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்களை குறிவைத்து கைது படலங்கள் தொடங்கி உள்ளன. இதனால் ஆங்காங்கே கலவர சூழலும் மூண்டுள்ளது.
வங்கதேசம் எதிர்கொண்டுள்ள புதிய நெருக்கடியை அண்டை தேசமான இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது.