கோரத்தாண்டவமாடும்'மண்டாஸ்' புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் தோன்றி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் 'மண்டாஸ்' புயலானது தீவிர புயலாக மாறியுள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை(09.12.2022) நள்ளிரவுக்கும் நாளை மறுதினம் (10.12.2022) காலைக்கும் இடையில் இந்தியாவின் தமிழ்நாட்டின் மரக்காணத்துக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் காலநிலை அவதான நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இன்றுமாலை(08) வெளியிட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலான செய்திக்குறிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புயலின் தற்போதைய நிலையில் இதனால் இலங்கையின் எப்பகுதிக்கும் நேரடியான பாதிப்பு கிடையாது. ஆனால் எதிர்வரும் 11.12.2022 வரை வடக்கு மாகாணத்தின் முழுப் பிரதேசத்துக்கும், கிழக்கு மாகாணத்தின் முழுப்பிரதேசத்துக்கும் மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்தோடு நாளையும் நாளை மறுதினம் காலை வரையும் இன்றுடன் ஒப்பிடும்போது காற்றின் வேகம் அதிகரித்தும் காணப்படும். கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-65 கி.மீ. வரையும் உள் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ. வரையும் வீசும் வாய்ப்புள்ளது.
இன்றைய தினம் வளிமண்டல வெப்பநிலை 22 பாகை செல்சியஸ் ஆக காணப்படுகின்றது. ஆனால் உணரக்கூடிய வெப்பநிலையானது ( Feeling Temperature) 18 பாகை செல்சியஸ் ஆக உள்ளது. இன்றைய தினம் வளிமண்டல சாரீரப்பதன் அளவு 88% ஆக உள்ளது.
இன்று இரவும் நாளையும்(09.12.2022) வெப்பநிலை மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு ஈரப்பதன் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதனால் உணரக்கூடிய வெப்பநிலை அளவு மேலும் குறைவடையலாம். இதனால் இன்றையை விட நாளை இன்னமும் குளிரான வானிலை நிலவக்கூடும்.
சற்று வேகமான காற்றுடன் கூடிய தொடர்ச்சியான மழை, ( சிலவேளைகளில் இடிமின்னலுடனும் மழை கிடைக்க கூடும்) குளிரான வானிலை, குறைவான கட்புலனாகு தன்மை( Visibility) போன்ற வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நாளைய தினம் ஆகக் குறைந்தது ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்காவது விடுமுறையை அறிவிப்பது உசிதமானது.
அத்தோடு முதியவர்கள், நோயாளிகள் மற்றும் ஏனையவர்கள் நாளைய தினம் நடமாட்டத்தை குறைப்பது நன்மை தரும்.
'மண்டாஸ்' புயலின் காரணமாக கடல் அலைகள் உயர்வாக இருக்கும் என்பதனால் எத்தகைய காரணத்தைக் கொண்டும் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என அதில் குறிப்பிட்டுள்ளார்.