மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
ஏ-9 சாலையில் பயணிக்கின்ற பேருந்துகள் கிளிநொச்சி நகரப் பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனையிறவு, உமையாள்புரம் ஆகிய கிராமங்களில் இருந்தும் திருமுறிகண்டி பக்கம் இருந்தும் கிளிநொச்சி நகரத்திற்கு வருகின்ற மாணவர்களை பேருந்துகள் ஏற்றாததன் காரணமாக, அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தே பேருந்துகளில் பயணிக்கின்ற நிலைமை உள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், கிளிநொச்சி மகா வித்தியாலயம், கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி, பரந்தன் இந்து மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்களையே பேருந்துகள் விரைவாக ஏற்றுவதில்லை எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இயக்கச்சி, முகமாலை, இத்தாவில் ஆகிய பகுதிகளில் இருந்து பளை மத்திய கல்லூரிக்கு வருகின்ற மாணவர்களையும் பேருந்துகள் விரைவாக ஏற்றிச் செல்வதில்லை என்ற குறைபாடு தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கடந்த காலங்களில் ஆராயப்பட்ட போதிலும் நிரந்தர தீர்வுகள் எட்டப்படவில்லை.