"14 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை தமிழர்களுக்கு இன்று இல்லை"
மாவீரர் நாள் நினைவேந்தல் வாரம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. போர் நிறைவடைந்து தற்போது 14 வருடங்கள் ஆகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழர்கள் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை போல் இப்போது இருக்கிறார்களா என கேட்டால் இல்லை என மிக உறுதியாக நான் கூறுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்த காலப்பகுதியில் மக்கள் குழப்பமடைந்திருந்தனர். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மிகவும் பலம் கொண்ட ஒரு அமைப்பாக கருதப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இனவாதத்தை காரணங்காட்டி தமிழர்களை இலங்கை அரசாங்கம் கொடுமை படுத்தியது. தற்போதைய இலங்கை அரசாங்கம் தனது இயலாமையை வைத்து தமிழ் மக்களை தாக்குகிறது. இதனால் தமிழ் மக்கள் மீண்டும் துன்பப்படுகிறார்கள்.
இலங்கை அரசாங்கத்தின் இன்றைய நிலை குறித்து அவர்கள் ஆராய்ந்து பார்க்காவிட்டால் இந்த நெருக்கடி நிலையை வெற்றி கொள்ள அவர்களால் முடியாது.
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை.
அரசியல்வாதிகள் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்ததன் பின்னரே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி காண தொடங்கியது.
கூட்டாட்சி முறையினால் மாத்திரமே நாட்டின் இன்றைய நிலையை மாற்ற முடியும் என்பதை ஸ்ரீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்கு அறிந்திருக்கிறார்.
கூட்டாட்சி முறையை நடைமுறைப்படுத்துவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையென்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஆனாலும் உண்மையை சொல்ல அவர் முன்வரவில்லை.
இதுவே அவரது பிரச்சினை. இலங்கையின் உண்மை நிலையை மாற்ற திட்டமிடாது வரவு செலவு திட்டத்தை முன்வைப்பது அர்த்தமற்ற செயல். இலங்கை அரசாங்கம் அறியாமையினால் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.