சிறிலங்கா சுதந்திரக்கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கினார் சந்திரிக்கா
சிறிலங்கா சுதந்திரக்கட்சியை மீண்டும் கைப்பற்றும் நடவடிக்கை ஒன்றை முன்னாள் சிறிலங்கா அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு சென்று அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளவர்களுடன் இணைந்து அவர் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது சம்பந்தமான முதலாவது கூட்டம் அமைச்சர் மகிந்த அமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. அந்த கூட்டத்தில் சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, சாந்த பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை காலையில் அமைச்சர் மகிந்த அமரவீர, சந்திரிகாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“மாலை வாருங்கள் சந்திக்கலாம்” என சந்திரிகா பதிலளித்துள்ளார். இதனையடுத்து ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தவிர ஏனையோர் இவரை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,
“எனக்கு மைத்திரிபால, தயாசிறி ஆகியோரை பிடிக்கவே பிடிக்கவில்லை.மைத்திரிபாலவை அதிபர் பதவிக்கு கொண்டு வர நான் உதவியதே எனது அரசியல் வாழ்வில் செய்த மிகப் பெரிய தவறு.
அவர் கட்சியை சர்வாதிகாரத்தை நோக்கி கொண்டு சென்றார். சஜித் பிரேமதாசவுக்கு முட்டுக்கொடுக்க பார்க்கின்றார்.நான் கட்சியின் யாப்பை மாற்ற முயற்சிக்கவில்லை.தலைவர் பதவிக்கு வேறு யாராவது வந்து விடுவார்கள் என்ற பயம் கொண்டவர்களே கட்சியின் யாப்பை மாற்றுவார்கள்” எனக் கூறியுள்ளார்.
அப்போது, “ நீங்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவீர்களா?” என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுள்ளனர்.இதற்கு பதிலளித்துள்ள அவர் , “நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.ஆலோசகர் என்ற வகையில் கட்சியை காப்பாற்ற தலையிடுவேன்” எனக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.