வியட்னாம் முகாமுக்குள் நுழைந்த இலங்கை அதிகாரிகள்; தற்கொலைக்கு முயற்சித்த அகதிகள்
சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறி கனடாவுக்கு செல்ல முயன்ற 306 பேரும் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,இலங்கை அதிகாரிகள் அவர்களை சந்திக்க சென்றுள்ளனர்.
306 பேரையும் நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து தமிழர் ஒருவர் உட்பட மூன்று அதிகாரிகள் குறித்த இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமுக்கு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வேளையில், இலங்கை அதிகாரிகளுடன் தமக்கு செல்ல முடியாது என்றும் வலுக்காட்டாயமாக தம்மை அனுப்ப முயன்றால் தாம் தற்கொலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுமென இலங்கையர்கள் கூறிய காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு தம்மை முகவர்கள் ஏமாற்றிய நிலையில், முகாமிற்கு வந்த அதிகாரிகள் தம்மை மீள நாட்டுக்கு வருமாறு வற்புறுத்துகின்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.