Home Archive by category

மாவீரர் நாள் நிகழ்வுகளில் அரசியல் தலையீடுகள் வேண்டாம் - துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு கோரிக்கை

மாவீரர் நாள் நிகழ்வுகளில் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ளவேண்டாமென சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு தமது கட்சி அரசியலை துயிலுமில்லங்களுக்குள் புகுத்தும் அநாகரீகமான செயற்பாட்டை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்துத்துக்குள் நேற்றைய தினம் நுழைந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் அங்கே அஞ்சலி செலுத்தவும் சிரமதானம் செய்யவும் முற்பட்ட போது சம்பூர் காவல்துறையினர் தலையிட்டு அனுமதியற்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட நிலையில் அவர்கள் வெளியேறியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பரசன், இது மாவீரர் நாள் நிகழ்வுகளை குழப்பும் செயற்பாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்துத் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் வாதிகளின் தலையீடுகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வை குழப்பங்களற்ற வகையில் மேற்கொள்ளக் கூடிய வகையில் ஏற்பாட்டுக் குழுக்களை அமைக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அந்தந்தப் பிரதேச மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தோர் மற்றும் முன்னாள் போராளிளைக் கொண்டு ஏற்பாட்டுக் குழுக்களை அமைக்கவேண்டுமென சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் க.பண்பரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திரமாகவும் உணர்வுபூர்வமாகவும் நினைவேந்தலைச் செய்ய அரசியல் வாதிகளும் கட்சிகளும் வழிவிடுவதுடன், மாவீரர் நாளைக் காரணம் காட்டி வெளிநாடுகளில் நிதியை பெற்றுக்கொள்வதையும் நிறுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார் .

Related Posts