சியோல் ஹாலோவீன் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தென் கொரியத் தலைநகர் சியோலில், ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150-ஐக் கடந்துவிட்டது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
சியோலில் உள்ள பிரதான சந்தைப் பகுதிகளில் ஒன்றான இடாய்வான் மாவட்ட சந்தையில் நேற்று ஹாலோவீன் கொண்டாட்டம் நடந்தது. நூற்றுக்கணக்கான கடைகள், மதுபான விடுதிக்கேளிக்கை விடுதிகள் நிறைந்த அந்தப் பகுதியில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் கூடியிருந்தனர்.
அப்போது, இரவு 10.40 மணி அளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 149 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் உயிருக்குப் போராடிவந்தனர். இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களில் 19 பேர் வெளிநாட்டினர்.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே மருத்துவர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர். தங்கள் உறவினர்களைக் காணவில்லை என 355-க்கும் மேற்பட்டோர் புகார் செய்திருப்பதாகவும் சியோல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.