Home Archive by category

குருந்துார் மலைக்கு நீதி அமைச்சர் நேரில் விஜயம்

முல்லைத்தீவு - குருந்துார் மலை மற்றும் வவுனியா - வெடுக்குநாறி விவகாரங்களைச் சுமுகமாகத் தீர்த்து வைக்கும் வகையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாவது வாரத்தில் அந்தப் பகுதிகளுக்கான நேரடி விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றுக்கு நியாயமான தீர்வை வழங்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் முதலாவது சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

அவற்றுள் தமிழ் மக்களின் வரலாற்றுத் தொன்மைமிகு குருந்தூர்மலை, வெடுக்குநாறி ஆலயம் தொடர்பான விவகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த இரண்டு அமைச்சர்களும் அங்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே, திருகோணேஸ்வர ஆலயத்துக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் நேரடியாகச் சென்று, ஆலயத்தின் புனிதத் தன்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வர்த்தக நிலையங்களை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தைச் சம்பந்தப்பட்ட தரப்புக்களின் சம்மதத்துடன் அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Posts