Home Archive by category

22 ஆவது திருத்தம் - சர்வதேசத்திற்கு சாதகமான சமிக்ஞை

22 ஆவது திருத்தச் சட்டத்தின் பூரண உரிமைகளும் மரியாதைகளும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கே வழங்கப்பட வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தச் சட்டம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குமென நாடாளுமனறத்தில் இன்று இடம்பெற்ற 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அவர், “69 இலட்சம் அதிபர் தேர்தல் ஆணையும், 68 இலட்சம் பொதுத் தேர்தல் ஆணையும் கருத்திற்கொள்ளப்படாது தன்னிச்சையான அபிப்பிராயங்களை அடிப்படையாகக் கொண்டு கடுமையான முடிவுகளை எடுத்ததன் மூலம் ஒரு மக்கள் போராட்டம் ஏற்பட்டது.

இதன் விளைவாக, ஏழு மூளை இருப்பதாகச் சொன்ன நிதி அமைச்சரும், பெரும்மன்னர் எனச் சொன்ன பிரதமரும், ஏதோச்சதிகார அதிபரும் அவர்களது அடிமைக் கூட்டமும் ஓடிச் சென்றனர்.

அதன் காரணமாகவே 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பேசுபொருளாகி முன்வந்தது.

இதன் பிரகாரம், 22 ஆவது திருத்தச் சட்டத்தின் பூரண உரிமைகளும் மரியாதைகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த பிரஜைகளுக்குமே வழங்கப்பட வேண்டும்.

225 பேருக்கு வரப்பிரசாதங்கள், சலுகைகள் வழங்கப்படுவது போலவே 225 இலட்சம் மக்களுக்கும் வரப்பிரசாதங்கள், சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

அதன் முக்கிய காரணிகள் மீதான நம்பிக்கையினாலும், நாடு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு, சர்வதேச சமூகத்திற்கு இது சாதகமானதொரு நேர்மையான சமிஞ்சையைக் கொடுக்கும் என்ற உணர்வினாலும், மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு ஆதரவளிகின்றோம்” என்றார். 

Related Posts