பட்டினி சாவு நடக்க முன் நடவடிக்கை எடுங்கள்! - நாடாளுமன்றில் மனோ பிரேரணை
இந்தியா, ஐ.நா. உட்பட உலகத்துடன் சேர்ந்து, பெருந்தோட்டங்களில் பட்டினி சாவு நடக்க முன் நடவடிக்கை எடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் இன்று அரசிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையையைச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
"பெருந்தோட்டத் துறையில் நிலவும் பாரதூரமான நிலைமைகளை பின்வரும் உலக நிறுவன அறிக்கைகள் காட்டுகின்றன.
(1) ஐ.நா. சபையின் உணவு விவசாய நிறுவனம்/உலக உணவு நிறுவனத்தின் இலங்கை உணவு நெருக்கடி கணிப்பீடு பற்றிய விசேட கூட்டறிக்கை
(2) ஐ.நா. சபையின் உலக உணவு நிறுவனத்தின் கண்காணிப்பு அறிக்கை
(3) இலங்கை செஞ்சிலுவை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் பொருளாதார ஆய்வறிக்கை
(4) நவீன அடிமைத்துவம் பற்றிய ஐ.நா. விசேட அறிக்கையாளர் டொமாயா ஒபகடாவின் ஐ.நா. மனித உரிமை ஆணையக அறிக்கை நாட்டின் உணவு நெருக்கடி பற்றிய குடும்ப மட்ட ஆய்வுகளில், பெருந்தோட்டத் துறையில் அதிகபட்ச 51 விகிதம் பதிவாகி உள்ளது.
நாட்டின் நகர துறையில் 43 விகிதமும், கிராமிய துறையில் 34 விகிதமும் பதிவாகியுள்ளன. இலங்கையில் இன்று ஒப்பீட்டளவில் மிகவும் நலிவுற்ற பிரிவினர் 51 விகிதமான பெருந்தோட்ட மக்கள் என்பதைக் கவனியுங்கள். இது எமக்குத் தெரியும். கைப்புண்ணை காண கண்ணாடி தேவையில்லை.
ஆனால், இதைத்தான் இன்று உலக சமுதாயமே கூறுவதைக் கவனியுங்கள். அங்கே துர்ப்பாக்கிய பட்டினி சாவு நடக்க முன் இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம் என்பதையும் கவனியுங்கள்.
ஐ.நா. விசேட அறிக்கையாளர் டோமொயா ஒபொகடா பெருந்தோட்ட மக்கள் ஒடுக்கப்படுவதில், பெருந்தோட்ட மக்கள் சிறுபான்மை தமிழர்கள் என்ற காரணமும் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
இது பாரதூரமான, ஆனால், உண்மை குற்றச்சாட்டு. இங்கே இனவாதம் நிலவுகின்றது. அதை அவர் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கூறியுள்ளார்.
நான் ஏற்கனவே இதுபற்றிய கலந்துரையாடலை ஆரம்பிக்கும்படி கொழும்பில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆலோசகர் ஜுஹான் பெர்னாண்டசுக்கு எழுதிக் கூறியுள்ளேன்.