பசில் தொடர்பில் பொதுஜன பெரமுன எடுத்துள்ள முடிவு
பசில் ராஜபக்சவுக்கு எதிராக அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் வெளிநாட்டில் இருந்து புத்திஜீவிகளின் சேவையை பெற்றுக்கொள்ள முடியாது என்பதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 22வது திருத்தத்தை எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஒரு நபரையோ, மதத்தையோ அல்லது வேறு குறுகிய நோக்கத்தையோ அடிப்படையாகக் கொண்டு நாட்டில் அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டால் அது அதற்கு எதிரானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி, அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு 6 மாதங்களுக்குள் தீர்வு காண்பதற்கு தனிநபர்களையோ அல்லது வேறு எந்த நோக்கத்தையோ முன்னிலைப்படுத்தாமல் நாட்டுக்கு அத்தியாவசியமான அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என நேற்று (ஒக்டோபர் 18) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் சாகர காரியவசம் தெரிவித்தார்.