அடங்கி இருக்குமாறு துப்பாக்கி முனையில் கூட்டமைப்பு உறுப்பினருக்கு அச்சுறுத்தல்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்றால் அடங்கி இருக்க வேண்டும்” என்று கூறி, சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் தனபாலசிங்கம் சுதர்சனின் கழுத்தில் கைத்துப்பாக்கியை வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியுள்ளார்.
கைதடி பல நோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (03) இரவு பெட்ரோல் நிரப்புவதற்காக சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் தனபாலசிங்கம் சுதர்சன் வரிசையில் நின்றுள்ளார்.
அங்கு சீருடையில் நின்ற PC இலக்கம் 76053 உடைய பொலிஸ் உத்தியோகத்தர், தனது கைத்துப்பாக்கியை எடுத்து முன்னாள் நகரசபை உறுப்பினரின் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்றால் அடங்கி இருக்க வேண்டும் என்று கூறி எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்ற போது, அங்கு கடமையில் இருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர், தமக்குத் தெரிந்தவர்களை வரிசையில் நிற்கவிடாமல், பெட்ரோல் நிரப்ப அனுமதித்துள்ளார்.
இதனை அவதானித்த முன்னாள் நகரச பை உறுப்பினர், அப்படி செய்ய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் முன்னாள் நகர சபை உறுப்பினரோடு முரண்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தரும் பொலிஸாரும் ஒரு கட்டத்தில் எல்லை மீறியதில், மேற்படி பொலிஸ் அதிகாரி, தனது கைத்துப்பாக்கியை எடுத்து சுதர்சனின் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியுள்ளார்.
இதனால் அங்கு நின்றவர்கள் அச்சமடைந்ததோடு, பலர் எருபொருள் நிரப்பாமல் திரும்பிச் சென்றதையும் காணமுடிந்தது. இந்த அச்சுறுத்தல் சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.