பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை; வடக்கு ஆளுநர்
மெகசின் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கைதிகள் நேற்று போராட்டத்தை கைவிட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
சிறைச்சாலைக்கு சென்று, கைதிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 11 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி எழுதிய கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும் அவர் கூறினார்.
அதனை சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று கைதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 13 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 6 ஆம் திகதி மாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.