திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வுபூர்வமாக ஆரம்பம்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகியது.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் யாழ் நல்லூரிலுள்ள திலீபனின் நினைவிடத்தில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் மலர் தூபி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து நல்லூரின் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.