மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக 10 ஆயிரம் ஹோட்டல்கள் இலங்கையில் பூட்டு
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, கோழி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு காரணமாக 30 சதவீத விருந்தகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் 50 சதவீத பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள 30,000 விருந்தகங்களில் சுமார் 10,000 விருந்தகங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் அரச நிறுவனங்களில் சுமார் 3,000 உணவகங்களும் பாடசாலைகளில் 4,600 உணவகங்களும் இயங்கி வருகின்றன.
கோதுமை மா, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக நிகழ்வுகளுக்கான (திருமண வீடுகள், மரண வீடுகள்) உணவு மற்றும் பான விநியோக சேவைகள் (கேட்டரிங்) முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
வீடுகளில் ரொட்டி, முட்டை கேக், பிட்டு போன்ற உணவுப் பொருட்களை தயாரித்து வந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூலப்பொருட்கள் கிடைக்காததால் அதையும் நிறுத்திவிட்டனர்.
தெருவோர உணவு விற்பனையும் முடிவுக்கு வந்துள்ளன என்றும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.