'அரசியல் கைதிகள் சிறையில் இறந்தாலும் தீர்வு கிடைக்காது'
அரசியல் கைதிகளை விடுவிப்போம் என ஒவ்வொரு ஜனாதிபதியும் கூறி வரும் நிலையில், தற்போது வரை எந்த முடிவும் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசு எம்மை ஏமாற்றி வருகிறது. அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் தற்போது உள்ள ஜனாதிபதியை நாம் சந்தித்தோம், அவரும் விடுவிப்போம் என்றார்.
ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு வழக்கு பதிவு செய்யப்படாமலே சிறையில் வாடுகின்றனர். அவர்கள் சிறையில் இறந்தாலும் தீர்வு கிடைக்காது.
இது தவிர வடக்கு கிழக்கில் 4 மக்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா கூறுகிறது.
ஏன் இப்படி இந்த அரசு செய்கிறது. இராணுவத்துக்கு நிதியை கொட்டிக் கொடுத்தமையால் தான் நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.- என்றார்.