'தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களே தயவு செய்து கண்திறவுங்கள்'
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தினை நிகழ்த்தி கொண்டிருக்கின்ற நிலையில், அவர்களின் நிலவரம் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சார்பாக கோரிக்கை விடுத்து நிற்கின்றோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்திருந்தார்.
யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை நேற்றைய தினம் ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.இதில் சில பகுதியினர் 1 1/2 வருடங்கள் நீதிமன்றத்திற்கு உட்படுத்தப்படாமல் இருக்கின்றார்கள்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயற்பட வேண்டும்.என கோரிக்கையினை விடுத்துக்கொள்கின்றோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் வருகின்ற 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது.அதேநேரத்தில் அரச கைதிகளின் விடுதலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யக்கூடாது என இந்த அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் இந்த அரசாங்கம் கால இழுத்தடிப்பது என்பதனைத் திட்டமிட்டு செய்கின்றதா? என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
எங்களுடைய உறவுகள் இங்குள்ள உறவுகளோடு சேருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்ற இந்த நேரத்தில் துன்பவியலான சம்பவங்கள் இடம்பெறுவது என்பது எமக்கு வேதனையினை அளிக்கின்றது.
தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் இந்த நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருக்க கூடாது .இதில் உங்கள் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது.
கடந்த காலங்களில் நாங்கள் ஏமாற்றம் அடைந்தது போன்று இந்த காலப்பகுதியில் நிகழுமா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.எனவே இந்த விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தினை நிகழ்த்தி கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகளை பார்வையிட்டு அவர்களின் நிலவரம் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சார்பாக கோரிக்கை விடுத்து நிற்கின்றோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள தமிழர்களையம் சிறையில் அடைப்பதற்கான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. 26 வருடங்களுக்கு மேலாக சிறை இருக்கின்ற அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாதிக்கப்பட்ட குறித்த தரப்பினரே பணியில் ஈடுபடுவதாக உள்ளது.இது ஒரு துன்பவியலான சம்பவமாகும் .இது தொடர்ந்து நிகழ கூடாது.இதனை அனைத்து தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.