ரணில் ஆட்சிக்கு காலக்கெடு விதித்த வாசுதேவ
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இன்னும் ஆறு மாத காலம் மாத்திரமே ஆட்சியில் இருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் எந்தவொரு தீர்வும் இல்லை என்பதால் அவரது ஆட்சிக் காலம் மிகக் குறுகியதாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றில் செயற்படும் சுயாதீன கட்சிகளினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
சுயாதீன கட்சிகளினால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியல் கூட்டணியில் அரசாங்கத்தில் இருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படுவோர், இளைஞர், பெண்கள் உட்பட பலரை கூட்டணியின் கொள்கைகளுக்கிணங்க இணைக்க எதிர்பார்த்துள்ளது.
இலங்கையில் அமைக்கப்படவுள்ள சுயாதீனக் கட்சிகளின் புதிய கூட்டணியின் பெயர், சின்னம் மற்றும் கொள்கை அறிக்கை என்பன நாளை நடைபெற இருக்கும் கூட்டணியின் ஆரம்ப விழாவில் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு கட்சியாக செயற்படும் போது பல அரசியல் குழப்பங்கள் வருமெனவும் அவற்றை சமாதானமான முறையில் தீர்த்துக்கொண்டு அனைவருடனும் ஒண்றிணைந்து பயணிக்க வேண்டுமெனவும் நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.