Home Archive by category

கைவிரித்தது உலக வங்கி; அதிர்ச்சியில் இலங்கை அரசு

இலங்கை போதுமான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்ட ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன எனவும் இந்த நெருக்கடியை உருவாக்கிய அடிப்படை கட்டமைப்பு காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் எதிர்கால மீட்சி மற்றும் அபிவிருத்தி மீள்தன்மை இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தொடர்ந்து உன்னிப்பாக இலங்கையை கண்காணிப்போம் எனவும், இலங்கை மக்களுக்கு தங்களுடைய ஆதரவின் தாக்கத்தை அதிகரிக்க மற்ற அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருக்கமாக உலக வங்கி ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், உலக வங்கியினுடைய இந்த அறிவிப்பானது இலங்கையில் இருக்ககூடிய அரச உயர் அதிகாரிகள் பொருளாதார வல்லுனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

காரணம் உலக வங்கியினுடைய உதவி ஓரளவு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரச தரப்பில் பலரும் கூறிவந்த சூழ்நிலையில், இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் சட்டத்திட்டங்கள் அல்லது உலக வங்கியின் சீர்திருத்தங்களை விரிவுப்படுத்துகின்ற பட்சத்தில் இலங்கையில் உலக வங்கியினுடைய உதவிகள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts