Home Archive by category

கொழும்பு மருதானையில் வெடித்தது போராட்டம்

கொழும்பு - மருதானையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில், போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் விரட்டிச் சென்று கைது செய்யும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளனர்.

மருதானையிலிருந்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,குறித்த போராட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட தடை உத்தரவை போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் வாசித்து காட்டியுள்ளனர்.
 
ஆர்ப்பாட்டப் பேரணி தடை உத்தரவை மீறி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தும் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையை நோக்கி நகர முற்பட்ட போது மருதானை டெக்னிக்கல் வீதிப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்வதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் எதிர்ப்பு பேரணியானது பொரளை பகுதியை நோக்கி திரும்பி மருதானை - டீன்ஸ் வீதிப்பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த நிலையில் டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சிற்கு முன்பாக வீதியை மறித்து காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்க கூட்டமைப்புகள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகியோரின் இணைவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Related Posts