Home Archive by category

பசியுடன் நித்திரைக்கு செல்லும் இலங்கை குழந்தைகள்; யுனிசெப் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலுள்ள குழந்தைகள் பசியுடன் நித்திரைக்கு செல்வதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.

குழந்தைகளின் போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகளவில் 6ஆவது இடத்திலும், தெற்காசியாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் நாடுகளில் 2ஆவது இடத்திலும் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லாரியா அட்ஜெய் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

உணவை பெற்றுக்கொள்ள முடியாமையால், பல குடும்பங்கள் வழமையாக உட்கொள்ளும் உணவைத் தவிர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் மூன்றில் ஒரு குழந்தைக்கு ஏதேனுமொரு வகையில் அவசர உதவி தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலை தொடருமானால், இலங்கையில் குழந்தைகள் தொடர்பான முன்னேற்றம் தலைகீழாக மாறும் எனவும் சிலவேளைகளில் அது நிரந்தரமாக இழக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.  
 
இலங்கையின் தற்போதைய நிலை தெற்காசியாவின் ஏனைய நாடுகளுக்கும் எச்சரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts