சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் சாணக்கியன் பேச்சு

உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்பது குறித்து இரா.சாணக்கியன் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
கனடாவில் நடைபெற்ற கொமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 500 இற்கும் அதிகமான பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் எல்.ஏ அப்பாவுவை சந்தித்து தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் விடயங்கள் குறித்தும் தமிழக அரசாங்கம் வழங்கி வரும் உதவிகள் குறித்தும் இரா.சாணக்கியன் கலந்துரையாடினார்.
அத்துடன், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் டொக்டர் ஜி. குணராஜ் இணை சந்தித்த இரா.சாணக்கியன், மலேசியத் தமிழர்கள், இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் எவ்வாறு தலையிட முடியும் என்பது குறித்து பேசியிருந்தார்.
இந்த சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்களுடைய பங்களிப்பினையும், தமிழ் அரசியல்வாதிகளின் பங்களிப்பினையும் எவ்வாறு பெற்றுக்கொள்ளவது என்பது குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக உலக நாடுகள் முழுவதிலும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து எவ்வாறு இலங்கை தமிழர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பது மற்றும் அரசியல் உரிமைகளை பெற்றுகொள்வதற்கு எவ்வாறு அழுத்தங்களை பிரயோகிப்பது என்பது குறித்து பேசியிருந்தேன்.
அத்துடன், எதிர்காலத்தில் எவ்வாறான திட்டங்களை வகுப்பது என்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தியிருந்தேன்:எனக் குறிப்பிட்டார்.