Home Archive by category

போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் - ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலையின் விளைவாக பெண் தலைமைத்துவ வாழ்வுக்கு உள்ளாக்கப்பட 90 ஆயிரம் ஈழத்தமிழ் பெண்களும் அவர்களது குடும்பங்களை சேர்ந்த 2இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர்களும் கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை கவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தேவைகளை பூர்த்திசெய்ய உலகத்தமிழர்களாகிய அனைவரும் ஒரு பொது வெளியில் கூட்டிணைந்து செயற்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என அழைப்பும் விடுத்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் வறுமை, பாலியல் வன்கொடுமை, சுகாதாரப்பிரச்சினை, அரச இராணுவ அடக்குமுறைகள் போன்றவற்றால் சுமார் 258 மில்லியன் விதவைப்பெண்கள் பாதிக்கப்பட்டு இருபதாக தரவுகள் கூறுகின்றன. 

இந்நிலையில், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு தமிழனம் மீதான முள்ளிவாக்கால் இனவழிப்பில் ஒரு லட்சத்து 46ஆயிரம் ஈழத்தமிழர்கள் இன்னப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். 

அதன்போது தாயையோ, தந்தையையோ அல்லது பெற்றோர்கள் இருவரையுமோ இழந்து 50 ஆயிரம் சிறுவர்கள் அனாதைகலாகப்பட்டுள்ளனர் என்பதை உலகத்தின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

இந்த இனப்படுகொலையின் விளைவாக பெண் தலைமைத்துவ வாழ்வுக்கு உள்ளாக்கப்பட 90 ஆயிரம் ஈழத்தமிழ் பெண்களும் அவர்களது குடும்பங்களை சேர்ந்த 2இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர்களும் கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். 

விதவைகள் என்ற காரணத்தினால் இப்பெண்கள் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வகிபாகத்தில் இருந்து வெளியேற்றப்படுவதால் பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் இலஞ்சம் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர். 

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அத்தியாவசிய சேவைகளை அணுக அல்லது வருமானம் பெற முயற்சிக்கும் போது இராணுவ மற்றும் புலனாய்வு கட்டமைப்புக்களால் பாலியல் சுரண்டல்களுக்கும், பேரம்பேசல்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஐ.நா பெண்கள் அமைப்பின் அறிக்கையொன்று கூறுகின்றது.

ஆயினும் தற்போது வரை ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக சட்டங்களின் ஊடாக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமல் இலங்கை படையினரின் அச்சுறுத்தலுடனேயே  பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. 

ஈழத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனையை விதிக்காமல் இலங்கைக்கு அளித்துள்ள நிதியுதவி இலங்கையின் தமிழின அழிப்பு அரசியலை மேலும் ஊக்குவிக்கும் என வலிந்து காணாமலாக்கப்பட்ட  உறவுகள் உள்ளிட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இப்பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தேவைகளை பூர்த்திசெய்ய உலகத்தமிழர்களாகிய நாம் ஒரு பொது வெளியில் கூட்டிணைந்து செயற்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தெருவிக்கப்பட்டுள்ளது.

வெறும் அழைப்பாக மாத்திரமின்றி இதனை நடைமுறைப்படுத்துவதற்கே நாம் விரும்புகின்றோம். எம்மோடு இணைந்து பணியாற்ற விரும்பிபவர்கள் எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உதவ முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts