ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர்களுக்கு சிக்கல்!
ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பனவற்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்டவர்களுள் ஜனாதிபதி செயலகத்தை உடைத்து சேதப்படுத்திய 55 சந்தேக நபர்களும், பிரதமர் அலுவலகத்தை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் 15 பேரும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை என்பவற்றுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அங்கிருந்த சொத்துக்களை திருடியமை தொடர்பில் 80 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தினங்களில் இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சட்ட மாஅதிபருடன் கலந்தாலோசித்து பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் தொல்பொருள் சட்டம் போன்றவற்றின் கீழ் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைடுக்கப்படும் எனவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.