மாங்குளத்தில் பெளத்த விகாரைக்காக காணி சுவீகரிப்பு
மாங்குளம் ஏ9 வீதியில் உணவு கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்கு சொந்தமான வெற்றுக் காணியை பெளத்த விகாரைக்காக யாத்திரிகர் மடம் கட்டுவதற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாங்குளம் அபிவிருத்தி சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் காணி பயன்பாட்டுக் குழுவில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணி பயன்பாட்டுக் குழு கூட்டடத்துக்கு மாங்குளம் அபிவிருத்தி சங்கம் மற்றும் ஏனைய பொது அமைப்புகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பினை பிரதேச செயலாளர் அனுப்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தின் பொது தேவைகளுக்கு காணித்தேவை உள்ளபோதும், குறித்த காணி பெளத்த விகாரையின் தேவைக்காக வழங்குவது தன்னிச்சையான செயற்பாடு என மாங்குளம் அபிவிருத்தி சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பெளத்த விகாரைக்காக இந்த காணி திட்டமிட்டு சுவீகரிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு மாங்குளம் அபிவிருத்தி சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.