Home Archive by category

தடுத்து நிறுத்தபட்ட புதிய விகாரை கட்டுமானம் - உதயமாகும் பேருந்து தரிப்பிடம்

மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் புதிய பௌத்த விகாரை நிர்மாணிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த பணிகளை கைவிடுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் சிறிலங்கா இராணுவத்தின் 542 வது படைப் பிரிவு பொறுப்பதிகாரி இதனை கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் தையிட்டி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தனியார் காணியில் விகாரை நிர்மாணிக்கப்பட்டமைக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அது தொடர்பாக பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறைப்பாடுகளை தெரிவித்த நிலையில் அவர் குறித்த பகுதிக்கு சென்று அவர் நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே விகாரை அமைப்பதற்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத்தின் 542 வது படைப் பிரிவு பொறுப்பதிகாரி தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.

விகாரை அமைக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட இடத்தை பேருந்து தரிப்பிடமாக மாற்ற இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts