இலங்கையிலிருந்து மேலும் 6 பேர் தமிழ்நாட்டில் தஞ்சம்
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்து அகதிகளாக இடம் பெயர்ந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு பகுதியில் ஒரு குடும்பம் மற்றும் தனி நபர் ஒருவரை சேர்த்து 3 சிறுவர்கள் உட்பட 6 பேரே இவ்வாறு தஞ்சம் அடைந்துள்ளனர்.
தஞ்சம் அடைந்தவர்களை கடலோர பொலிஸார் விசாரணைக்காக மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், தற்போது அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் இருந்து 30 குடும்பங்களை சேர்ந்த 117 நபர்கள் அகதிகளாக மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.