Home Archive by category

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் விகாரைகள் அமைப்பதற்கு நான் எதிர்ப்பு

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் விகாரைகள் அமைப்பதற்கு நான் என்றும் எதிர்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

குரும்பசிட்டி கிழக்கு கலைமகள் முன்பள்ளி, இளைஞர் அமைப்பு, சனசமூக நிலையம் ஆகியன இணைந்து நடாத்திய கிராமிய விளையாட்டு விழா நேற்று (07) நடைபெற்ற போது குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய அவர், 

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட இந்த குரும்பசிட்டி கிழக்கு கிராமத்தின் இளைஞர்கள் கிராமிய விளையாட்டுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாராட்டத்தக்கது. 

பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைகளோடு இருக்கும் இந்த மக்கள் தமது விவசாய நிலங்களை இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோருகிறார்கள்.

உயர் பாதுகாப்பு வலயம் என்பது பாதுகாப்பு தேவைகளை தாண்டி விகாரைகளை அமைத்து மதநடவடிக்கைகள் செய்யப்படுவதற்கு நான் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். 

எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் இவ்விடயங்களை நிச்சயமாக நான் வலியுறுத்துவேன்.

அண்மையில் தையிட்டில் இடம்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து, சிலர் விகாரைகள் அமைத்தால் என்ன தவறு? நாம் லண்டனில் கோயில் கட்டவில்லையா? கனடாவில் கோயில் கட்டவில்லையா? என கேட்கிறார்கள். 

நான் விகாரை கட்டப்படுவதற்கு எதிர்ப்பில்லை. அது மக்களின் காணியில் அனுமதியின்றி கட்டப்படுவதை எதிர்க்கிறேன். உயர்பாதுகாப்பு வலய போர்வைகள் விகாரைகள் அமைப்பதை எதிர்க்கிறேன்.

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் நிலங்களை கொண்டுள்ள மக்களின் வேதனையை நான் அறிவேன். எனது காணிகளும் அண்மையில்தான் விடுவிக்கப்பட்டன. 

வளம்மிக்க எமது நிலங்கள் எமது மக்களுக்கு திரும்பக் கிடைக்கவேண்டியது அவசியமானது. என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

Related Posts