Home Archive by category

தையிட்டி விகாரை – அறிக்கையின் பின்னரே தீர்வு – தமிழ் எம்.பிகளை குற்றம் சுமத்திய அமைச்சர்

யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை அமைக்கப்பட்டமை தொடர்பாக முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னரே இந்த பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் என புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக தனியார் காணிக்குள் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பாக அமைச்சரிடம் எழுப்பட்ட கோள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் ஏற்படுகின்றன. 

இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பது எமக்குத் தெரியவில்லை.

அரசியல்வாதிகள் தமக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர். 

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர் ஆலய விவகாரத்திலும் இவ்வாறே இடம்பெற்றது.

அவர்களாகவே சென்று ஆலயத்தை உடைத்து அதனை நாம் உடைத்ததாகக் குறிப்பிட்டனர். 

எம்மை இனவாதிகளெனக் கூறுபவர்கள் இறுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் உடைந்து விழுந்த கோவில்களை எமது முயற்சியில் மீளப் புனரமைத்தமை தொடர்பில் எவரும் பேசவில்லை.

எம்மால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான விடயங்கள் ஒருபோதும் ஊக்குவிக்கப்படுவதில்லை. 

அதே போன்று இலங்கையிலுள்ள 7 சிவன் ஆலயங்களை மீளப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்குள்ள சுதந்திரத்தை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. 

இவ்வாறான மத விவகாரங்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனில் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தலாம். 

ஆனால் அனைவரும் மூத்தோர் என்ற அடிப்படையில் எம்மால் ஒழுக்கமாக நடந்து கொள்ள முடியுமல்லவா?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறும் இடத்துக்குச் சென்றால், 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும் அங்கு செல்கின்றனர். 

அதனைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளும் அங்கு செல்கின்றன. வாக்குகளுக்காக அனைவரும் இவ்வாறு செயற்படுகின்றனர். மாறாக மக்கள் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை.

Related Posts